சபரிமலை: மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலையில் தற்காலிக தபால் நிலையம் செயல்படத் துவங்கியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் சீசன் நேரங்களில் தற்காலிக தபால் நிலையம் செயல்படும். நடப்பாண்டுக்கான சிறப்பு தபால் நிலையம் ஜனவரி 19 வரை செயல்பட உள்ளது.கோவிலுக்கு நேரில் வர முடியாத பக்தர்கள் பிரார்த்தனை, வேண்டுதல் கடிதங்கள், திருமணம் போன்ற வீட்டு சுப நிகழ்ச்சி அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கலாம். கடிதங்களை சேகரித்து கோவிலுக்கு அனுப்பி வைக்கும் பணியை சிறப்பு தபால் நிலையம் மேற்கொள்கிறது. அனைத்து தபால்களிலும் 18 படிகளுடன், அய்யப்பன் உருவத்துடன் கூடிய சிறப்பு முத்திரை அச்சிடப்படுவது கூடுதல் சிறப்பு. நிலைய அதிகாரி, இரண்டு தபால்காரர்கள், நான்கு பன்முக பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை தபால் நிலையம் செயல்படும் என்றனர். - நமது நிருபர் -