திருநெல்வேலி: வனபோஜனம் தாத்ரி நாராயண பூஜை கல்லிடைக்குறிச்சியில் நடந்தது. கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லி மரத்திற்கு பூஜை செய்து வனபோஜனம் நிகழ்த்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநாளில் நெல்லி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபடுவர். வனதேவதைகளை வணங்கி நடத்தப்படும் பூஜையாக இது நடந்து வருகிறது. கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி நதி பாயும் பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தாத்ரி நாராயண தாமோதர பூஜை கொண்டாடப்பட்டது. பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கரந்தையார்பாளையம் பிராமண சமூகம், ஆயிரங்கால் மண்டபம் பொறுப்பாளர் விஸ்வநாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.