மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எலித்தொல்லை அதிகரித்ததால் மின்ஒயர் துண்டிப்பு, தீ விபத்து போன்ற பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
இக்கோயிலில் அனைத்து பகுதிகளிலும் எலிகள் ஊடுருவியுள்ளன. நேற்றுமுன்தினம் அம்மன் மூலஸ்தானம் முன்புள்ள அர்த்த மண்டபத்தில் விளக்கின் நெய் திரியை உண்பதற்காக எலி எடுத்து வந்ததில் தரை மேட் தீப்பிடித்து புகைந்தது. நல்லவேளையாக பெரிய பாதிப்பு இல்லை. மூலஸ்தானத்தில் அம்மன், சுவாமிக்கு அபிேஷகம் செய்யும் நீர் செல்ல துவாரம் உள்ளது. அதன் வழியே, நடை சாத்தப்படும் சமயங்களில் எலிகள் ஊடுருவுகின்றன. குளிரூட்டும் இயந்திர கருவிகள் உட்பட பல இடங்களில் தங்கி குடும்பம் நடத்துகின்றன. எலிகளை ஒழிக்க முயற்சித்தால் கோயிலுக்குள் அது எங்கேயாவது இறந்து, துர்நாற்றம் வீசுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் குளிரூட்டும் இயந்திரத்தில் எலி ஒன்று இறந்து துர்நாற்றம் வீசி பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனால் எலி ஒழிப்பில் தயக்கம் நிலவுகிறது.2018 பிப்.,ல் வீரவசந்தராய மண்டபத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்திற்கு எலிதான் காரணம் என அப்போது கூறப்பட்டது. எலிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே கோயிலுக்குள் மின் ஒயர் துண்டிப்பு, தீ விபத்து போன்று அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்கும்.
ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தல்: நேற்றுமுன்தினம் நடந்த லேசான தீ விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் கூறுகையில், கருவறை முன் நடந்த தீ விபத்து மனவலியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் பணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும். தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இதுபோன்று சம்பவம் இனி நடக்காமல் இருக்க கோயில் தொடர்பு உடைய அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.