பதிவு செய்த நாள்
03
டிச
2021
12:12
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலில் 45 ஆண்டுகளுக்கு பின் வரும் 6ம் தேதி பள்ளியறை பூஜை நடக்கிறது. கல்லிடைக்குறிச்சியில், குலசேகர பாண்டியன் மன்னரால் கட்டப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரும் பழமையான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத குலசேகரமுடையார் கோயிலில், கடந்த 1976க்கு பின் பள்ளியறை பூஜைகள் நடக்கவில்லை. இந்நிலையில், பள்ளியறைக்கு எழுந்தருள செய்ய வேண்டி புதிதாக சொக்கர், அம்பாள் சிலைகளும், பள்ளியறை பல்லக்கு வாகனமும் செய்யப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி மாலை 6 மணிக்கு அனுக்கையுடன், முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 6ம் தேதி காலையில் திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, 2ம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து சொக்கர், அம்பாள் சிலைகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவில் சொக்கர், அம்பாள் பள்ளியறைக்கு எழுந்தருளல், பள்ளியறை பூஜை நடக்கிறது. இக்கோயிலில் இருந்து கடந்த 1982ல் காணாமல் போன ஐம்பொன் நடராஜர் சிலை 37 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு, 2019 செப்.24ல் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு தனி சன்னதியில் எழுந்தருள செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.