பதிவு செய்த நாள்
03
டிச
2021
01:12
சென்னை: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, இன்று முதல் 64 சிறப்பு பஸ்களை, அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்குகிறது.
கொரோனா பரவல் காரணமாக, தமிழகம், கேரளா இடையே கடந்தாண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து, நேற்று முன்தினம் முதல் மீண்டும் துவங்கியது. இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களின் போது, தமிழகத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள் பெருமளவில் செல்வது உண்டு.
இந்தாண்டும் அவர்கள் சென்று வர வசதியாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி வரை தினமும் 64 பஸ்கள் இயக்கப்படும்.அதாவது சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலுார் நகரங்களில் இருந்து, பம்பைக்கு அதிநவீன, அல்ட்ரா டீலக்ஸ் என்ற, சொகுசு மிதவை பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன. தேவைக்கேற்ப பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இச்சிறப்பு பஸ்களுக்கு, www.tnstc.in என்ற போக்குவரத்து கழக இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 94450 14412, 94450 14450, 94450 14424, 94450 14463, 94450 14416 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.