பதிவு செய்த நாள்
03
டிச
2021
04:12
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், கடை ஞாயிறு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரகங்களில் ராகுபகவான் தனி சன்னதியில் மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறார். சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா சிறப்பாக நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று திருமண் எடுத்தல், முளைப்பாலிகையிடுதல், திருக்காப்பு கட்டுதலும், இன்று(03ம் தேதி) காலை, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க விழா கொடியேற்றம் நடந்தது. கொடிமரம் அருகே உற்சவரான சோமஸ்கந்தர், கிரிகுஜாம்பிகையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, வரும் 10ம் தேதி வரை உற்சவர் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் கோவில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 11ம் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் தேரோட்டமும், 12ம் தேதி காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் புறப்பாடும், மதியம் 2 மணிக்கு, கோவிலின் உள்ளே உள்ள சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.