பதிவு செய்த நாள்
03
டிச
2021
04:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் பெய்த கன மழையினால் வீடுகள், கோயில்களுக்குள் மழை நீர் புகுந்தது.
நகரில் கடந்த இரு நாட்களாக மழையில்லாமல் வெயிலடித்து வந்த நிலையில், நேற்று இரவு 11:00 மணி முதல் 2:00 மணி வரை கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்தில் 67 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் ஆத்துகடை, காமாட்சி அம்மன் கோவில், குலாலர் பஜார், கல்லணை ஓடைத்தெரு, அசோக்நகர், ரைட்டன்பட்டி, தைக்கா பட்டி தெருக்களில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியது. தாழ்வான வீடுகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்த நிலையில் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
நள்ளிரவு பெய்த மழையினால் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், ஆண்டாள் கோயில், பழனி ஆண்டவர் கோயில்களில் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். அத்திகுளம் கிராமத்தில் மழை நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 3:00மணி நேரம் மழையினால் வடமலைக்குறிச்சி, செங்குளம், லைலாப்பேரி, சிறுகுளம், சோளங்குளம், அத்திகுளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவகாசி சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், தாசில்தார் ராமச்சந்திரன், நகராட்சி கமிஷனர் மல்லிகா பார்வையிட்டனர். மீட்பு பணிகளில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி அலுவலகர்கள், போலீசார் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக மற்றும் அதிமுகவினர் போட்டிபோட்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.