பதிவு செய்த நாள்
05
டிச
2021
07:12
திருமலை: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், திருப்பதி அருகே உள்ள திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில், நடப்பாண்டுக்கான பிரம்மோற்ஸவம் கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரமோற்ஸவத்தின் முக்கிய திருநாளான வசந்த உற்ஸவம் நடந்தது.தாயார் கோவில் பிரமோற் ஸவத்தில், சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, 5 வெண்பட்டு திருக்குடைகளை, நேற்று கோவில் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார். பட்டுச்சேலை, மங்கலப்பொருட்களும் தாயாருக்கு சமர்ப்பிக்கப்பட்டன; தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். பிரம்மோற்ஸவத்தின் முக்கிய திருநாளாக நேற்றிரவு நடந்த கஜவாகன சேவையில் திருக்குடைகள் பயன்படுத்தப்பட்டன. திருமலை திருப்பதி ஏழுமலையான், காளஹஸ்தி காளத்தீஸ்வரர், காணிப்பாக்கம் விநாயகர், விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்ஸவங்களின் போதும், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், வெண்பட்டு திருக்குடைகளை ஆர்.ஆர். கோபால்ஜி சமர்ப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.