பழநி: பழநி மலைக்கோயிலில் கழிவுகளை மொத்தமாக, ஒரு இடத்தில் சேகரித்து, அதன் மூலம் சமையல் எரிவாயு தயாரிக்கும், பணியை கோயில் நிர்வாகம் துவக்க உள்ளது. பழநி சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே, சுமார் 20 லட்ச ரூபாய் செலவில், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, கழிவுநீரில் எரிவாயு தயாரிக்கும் இரண்டு எரிவாயு உற்பத்தி கலன்கள் அமைக்கப்பட்டு, அதன் அருகே தொட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மலைக்கோயில் கழிவுகளை குழாய்கள் மூலம் இங்கு கொண்டு வந்து, திடக்கழிவுகள் சேகரிப்பட்டு, தொட்டிகளில் நிரப்பப்படும். அதனருகேயுள்ள எரிவாயு உற்பத்தி கலன்களில் செலுத்தப்பட்டு "காஸ் தயாரிக்கப்படுகிறது. தயாரிக்கப்படும் எரிவாயுவை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. இதன் மூலம் கழிவுநீரால் மாசு ஏற்படுவது தடுக்கப்பட்டு சுகாதாரமும் காக்கப்படுகிறது என்றார்.