காட்டுப்பாதையில் பக்தர்களின் பசி தீர்க்கும் ஐயப்பா சேவா சங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2022 12:01
சபரிமலை: சபரிமலைக்கு செல்ல அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ள பெருவழி பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு பசி தீர்க்கும் பணியில் ஐயப்பா சேவா சங்கம் ஈடுபட்டுள்ளது.
பெரு வழிப்பாதையில் அழுதை முதல் பம்பை வரை 18 கிலோ மீட்டர் துாரம் பெரியார் புலிகள் சரணாலய காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனத்துறை சார்பில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை. அழுதையில் செங்குத்தான ஏற்றம் ஏறி கரிமலையில் இறங்கும்போது பக்தர்கள் சோர்வடைந்து விடுகின்றனர். இவர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கஞ்சி வழங்கப்படுகிறது.
இதற்கான பொருட்கள் அனைத்தும் பம்பையில் இருந்து தலைசுமடாக கரிமலை கொண்டு செல்லப்படுகிறது. சேலத்தை சேர்ந்த கார்த்திகேயன் முகாம் அலுவலராகவும் இவரது கீழ் இவரது தலைமையில் 10 தொண்டர்களும் இந்த சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல வலியான வட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள சேவா சங்க முகாமிற்கு அலுவலராக சென்னையைச் சேர்ந்த ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார். கரிமலைப்பாதையில் பக்தர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அல்லது விபத்துகள் ஏற்பட்டாலோ பாதிக்கப்பட்டவர்களை ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் சுமந்து ஒளியம்புழா என்ற இடத்துக்கு கொண்டு வருகின்றனர்.பம்பையிலிருந்து ஐயப்பா சேவா சங்க ஆம்புலன்ஸ் மூலம் ஹில்டாப் வழியாக ஒளியம்புழா சென்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.இதுபோல சன்னிதானம், பம்பை, நிலக்கல் போன்ற இடங்களிலும் பக்தர்களுக்கு உதவி செய்வதில் ஐயப்பா சேவா சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.