பதிவு செய்த நாள்
10
ஜூலை
2012
10:07
கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஜூலை, 15ம் தேதி தங்கத் தேரோட்டம் நடப்பதால், ஓராண்டுக்கு மேலாக எதிர்பார்ப்பில் காத்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோபி அருகே பழமையும், வரலாற்று சிறப்பும் மிக்க பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகில் அமரபணீஸ்வரர் மற்றும் ஆதி நாராயண பெருமாள் கோவில்களும் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த அம்மன் கோவில்களில் பாரியூரும் ஒன்று. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடக்கும் குண்டம் திருவிழா மற்றும் முத்துப் பல்லக்கு திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவர். புகழ்மிக்க பாரியூர் கொண்டத்து காளியம்மனுககு தங்கத்தேர் செய்ய, எட்டு கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி, 160 கிலோ செம்பு ஆகிய கலவையில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்றாண்டு ஃபிப்ரவரி மாதம் தேரோட்டத்துக்கான வெள்ளோட்டம் நடந்தது. கோவில் பிரகாரத்தில் தேர் ஓடுவதற்காக பாதை அமைக்கப்படாததால், கோவில் அறைக்குள் வைத்து தேர் பூட்டப்பட்டது. அதன்பின் ஓராண்டாக இயக்கப்படவில்லை. இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத் தேர் அமைத்த பிறகும், அம்மன் உலா வர முடியாத நிலை ஏற்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் உதவியோடு, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவிலைச் சுற்றிலும் சலவைக்கல் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தங்கத்தேர் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கூடுதலாக இரும்புக் கதவு அமைக்கப்பட்டுள்ளது. ஓடுதளம் தயாராகி விட்டதை தொடர்ந்து, புதிய தங்க ரதம் ஓடுதளம் திறப்பு விழா மற்றும் தங்கத் தேரோட்டம் துவக்க விழா, ஜூலை 15ம் தேதி மாலை, 6 மணிக்கு நடக்கிறது. வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுப்பணி துறை அமைச்சர் ராமலிங்கம், அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஓராண்டுக்கு பின் பாரியூர் அம்மன் கோவிலில் மீண்டும் தங்கத் தேரோட்டம் நடப்பதால், எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.