பதிவு செய்த நாள்
16
ஜன
2022
06:01
மதுரை : மேலூர் வட்டம், மாவட்டம் தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் தமிழர் திருநாள் தை இரண்டாம் நாள் சனி மஹா பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு திருக்கோயிலில் நடைபெற்றது. நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
முன்னதாக காலை 8.30 மணிக்கு, பிரதோஷ உற்சவ மூர்த்திக்கு யாகசாலை பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு, நந்தியம் பெருமாளுக்கும், சங்கரலிங்கம் சுவாமிக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சுவாமிகளுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் காட்சி அளித்தனர். இன்றைய இறைப் பணியில் மதுரையை சேர்ந்த மிதுன் சக்ரவர்த்தி - சந்தனப்ரியா குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு புளிசாதம், நெய் சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.