பதிவு செய்த நாள்
18
ஜன
2022
05:01
வியாசர்பாடி: வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் குளத்தில், 20 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை வியாசர்பாடியில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், ராஜராஜ சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. சூரியன், தன் பிரம்மதோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக, இங்குள்ள வன்னி மரத்தடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். அப்பூஜையின் விளைவாக இறைவன், சூரியன் முன் தோன்றி, அருள் செய்து பிரம்மதோஷத்தை நீக்கினார்.மேலும், சூரியன் தினமும், அருகில் உள்ள கோவில் குளத்தில் நீராடி இறைவனை பூஜித்து வந்ததால், அக்குளம் சூரியதீர்த்தம் என பெயர் பெற்றது.மேலும், சூரியன் தன் பெயருடன் கடவுள் பெயரை இக்கோவிலுக்கு சேர்க்க வேண்டுமெனக் கூறியதால், சூரியன் மறுபெயரான ரவி சேர்த்து, இக்கோவில் ரவீஸ்வரர் என அழைக்கப்பட்டதாக தல வரலாறுகூறுகிறது.பெரும் வரலாறு கொண்ட கோவில் குளத்தில், 16வது நாள் காரியம், புண்ணியதனம் மற்றும் திவசம் உள்ளிட்ட நிகழ்வுகளை, அதிக அளவில் இப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.ஆனால், வரலாறு பெற்ற இக்கோவில் குள படிக்கட்டுகள் முழுதும் உடைந்து, மோசமான நிலையில், பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன. எனவே, பல வரலாறுகள் கொண்ட கோவில் குளத்தை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கோவில் குளத்தில் வடக்கு மற்றும்தெற்கு புறத்தில் 14 லட்சம்ரூபாய் செலவில், 12அடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உள்ளத்தில் உள்ள படிக்கட்டுகள், சாய்தளங்கள் 6 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.