பதிவு செய்த நாள்
19
ஜன
2022
03:01
வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே நிலாப்பெண் எனும் வினோதமான பாரம்பரிய திருவிழா, ஊர் மக்கள் முன்னிலையில் விடிய விடிய நடந்தது.
வேடசந்தூர் ஒன்றியம் குட்டம் ஊராட்சி கோட்டூரில் மாசடச்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு, நிலாப் பெண் என்ற வினோதமான பாரம்பரிய திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அந்த ஊரைச் சேர்ந்த, பருவமடையாத, உடல் மெலிந்த ஒரு இளம்பெண்ணை ஊர் பெரியவர்கள் முன்னிலையில், இரு வாரங்களுக்கு முன்பு தேர்வு செய்கின்றனர். தேர்வு செய்யப்பட்ட இளம்பெண் மூன்று ஆண்டுகளுக்கு நிலா பெண்ணாக வலம் வருவார். தற்போது நடப்பு ஆண்டில் கோட்டூரை சேர்ந்த விசுவநாதன் - விசாலாட்சி மகள் பிரதிக்க்ஷா 11, நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாடிக்கொம்பு குருமுகி வித்யாஷ்ரம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வு செய்யப்பட்ட நிலாப்பெண்ணுக்கு கடந்த இரு வாரங்களாக, வீடுகள்தோறும் பால், பழம், முட்டை, பேரிச்சை, சாப்பாடு உள்ளிட்ட உணவு வகைகளை கொடுத்து சீராட்டி வருகின்றனர். நேற்று தைப்பூசம் என்பதால் நிலாப்பெண் விழா சிறப்பாக தொடங்கியது. மாசடச்சியம்மன் கோவிலில் இருந்து, ஊர் மக்கள் புடைசூழ, நிலாப்பெண் பிரதிக்க்ஷா, ஊர் அருகில் உள்ள சரளைமேடு பகுதிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சென்ற பெண்கள் ஒன்று சேர்ந்து, கூடையில் பறித்து வைக்கப்பட்ட ஆவாரம் பூவைக் கொண்டு பிரதிக்ஷாவுக்கு அலங்காரம் செய்து தலையில் சூடி, அழகு படுத்துகின்றனர். பிறகு கூடை நிறைய ஆவாரம் பூவை தலையில் சுமந்தபடி மீண்டும் ஊர்வலமாக ஊரை நோக்கி வருகின்றனர். மாசடச்சிஅம்மன் கோயில் முன்பு, மாவிளக்கு முளைப்பாரி வைத்து கும்மியடித்து கொலவை சத்தமிட்டு மகிழ்கின்றனர். அங்கு தாய்மாமன் எழுப்பிய சிறு குடிசையில் அமரவைத்து பால்பழம் கொடுக்கின்றனர். பிறகு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டு விட்டு, அங்கிருந்து ஊர் எல்லை நோக்கி செல்கின்றனர். அங்குள்ள கிணற்றில் இளம்பெண் சுமந்துகொண்டு சென்ற பூக்கூடையை நீரில் மிதக்க விடுகின்றனர். அதே நேரத்தில் தீபம் ஏற்றிய விளக்கை கிணற்று நீரில் மிதக்க விடுகின்றனர். இந்த தீபம் அணையாமல் கிணற்று நீரில் வளமாக சுற்றிவரும். அதன்பிறகு பொதுமக்கள் அனைவரும் வீடு திரும்புவார். இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியால், ஊர்மக்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழவும், போதிய மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நலம் பெறவும் மனதார வேண்டுகின்றனர். நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.