பதிவு செய்த நாள்
20
ஜன
2022
09:01
வடவள்ளி: மருதமலையில், 5 நாட்களுக்குபின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கடந்த, 14 முதல் 18ம் தேதி வரை கோவில்களில், பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, கோவில்களில், 5 நாட்கள், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தைப்பூச திருவிழாவும் பக்தர்களின்றி நடந்தது. இந்நிலையில், கோவில்களில் பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். தைப்பூசத்தன்று பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், நேற்று, பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் மருதமலைக்கு வந்தனர்.
தைப்பூசத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று, சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல், 12:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 5:30 மணிக்கு பொன்னூஞ்சல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து, 7:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதரமாய் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து, தெப்பத் திருவிழா நடந்தது.