பதிவு செய்த நாள்
23
ஜன
2022
10:01
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், அனைத்து ராஜகோபுர விமானங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
சென்னையில் வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோவில். இக்கோவிலுக்கு, 2007ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 14 ஆண்டுகள் கழிந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த,பாலாலயம் செய்யப்பட்டு, ஆகம விதிகளின் படி திருப்பணிகள் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, யாகசாலை பிரவேசம், 19ம் தேதி துவங்கி முதற்கால யாக பூஜை, ஜபம், ஹோமம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் அஷ்டபந்தன மருந்து சார்த்தும் வைபவமும், ராஜகோபுரங்களில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தும் பணிகளும் நடந்தன.
இந்நிலையில், நேற்று காலை 8:30 மணி முதல் விசேஷ சந்தி, நான்காம் கால யாக பூஜை, ஜபம், ஹோமங்கள் நடந்தன. பகல், 12:௦௦ மணிக்கு மகா பூர்ணாஹுதி நடந்தது. மாலை 5:30 மணிக்கும் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடந்தன. இன்று (23ம் தேதி) காலை 6.00 மணிக்கு ஆறாம் காலயாக சாலை பூஜைகள் துவங்கியது. தொடந்து நாடி சந்தனம், தத்வார்ச்சனை, ஸ்பர்ஸாஹுதி நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு பரிவார யாகசாலை மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. காலை 9.00 மணிக்கு பிரதான யாகசாலை மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், திருகலசங்கள் எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, 4 கருடன்கள் வட்டமிட அனைத்து ராஜகோபுர, விமானங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்காக அறுபடை வீடுகள், ஒன்பது பிரசித்தி பெற்ற கோவில்கள், நாட்டில் உள்ள 15 புண்ணிய நதிகளின் நீர் தருவிக்கப்பட்டுள்ளது.இக்கோவிலின் கும்பாபிஷேக நாள், இரண்டு மாதங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. தற்போது, கொரோனா நோய் தொற்று பரவும் சூழலில், இன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கும்பிஷேக நிகழ்வுகளை தடையின்றி நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில், அர்ச்சகர்கள், உதவியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள், நகரத்தார்கள், உபயதாரர்கள் என குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அடிப்படை வசதிகள் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, வீட்டில் இருந்தபடி, யு- டியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் கண்டு தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பிஷேக நிகழ்வுகளை தடையின்றி நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில், அர்ச்சகர்கள், உதவியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள், நகரத்தார்கள், உபயதாரர்கள் என குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அடிப்படை வசதிகள் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, வீட்டில் இருந்தபடி, யு- டியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் கண்டு தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.