பதிவு செய்த நாள்
25
ஜன
2022
11:01
திருப்பரங்குன்றம்: மதுரையில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய 9 கல்வெட்டுகள் ஒரே இடத்தில் கண்டுபிடிப்பு. மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்கள் பிறையா, ராஜகோபால் கல்வெட்டு ஆராய்ச்சி ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் வடக்கு தாலுகாவில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் வயல்களுக்கு நடுவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோயிலும் அதை ஒட்டி சத்திரமும் இருந்ததை கண்டு பிடித்தனர்.
இக்கோயில் தற்போது மருதையா கோயில் என்றும் செண்பக விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கல் தூண்களுடன் கூடிய, வழிப்போக்கர்கள் தங்கும் மண்டபமாக இவ்விடம் அமைந்திருக்கலாம். சேர்வைக்கார குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாக இதனை பராமரித்து வந்திருக்கின்றனர். ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த சுப்பிரமணிய சேர்வைகாரர் இம்மண்டபத்தை விநாயகர் கோயிலாக மாற்றி, கருவறை மகாமண்டபம் திறந்தவெளி முன் மண்டபத்துடன் வழிபாட்டிற்குரிய கோயிலாக உருவாக்கியுள்ளார். இங்கு ஒன்பது கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஏழு கல்வெட்டுகள் கோயிலிலும், இரண்டு கல்வெட்டுகள் சத்திரத்திலும் உள்ளன.
கல்வெட்டுகளில் மணியஞ் சேர்வைகாறன், குமார இருளப்ப சேர்வைக்காறன், முத்திருளாண்டி சேர்வைகாறன், குமார சோனை சேர்வைக்காறன், அழகாயி, வீராயி, சென்னம்மாள் குமாரன் வீரணன் சேர்வைக்காறன், குமாரன் சுப்பிரமணிய சேர்வைகாறன் போன்ற சேர்வைகாரர் சமுதாயத்தை சார்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் குமாரன் சுப்பிரமணிய சேர்வைகாறர் செய்த விநாயகர் கற்கோயில், சத்திரம், கிணறு, தோப்பு, ஊரணி, சிவம், விநாயகன் துணை எனும் வார்த்தைகளை காணமுடிகிறது.
அக்காலத்தில் இக்கோயிலை திருப்பணி செய்த சேர்வைக்கார சமுதாயத்தினர் இந்த கோயிலை சுற்றி இருக்கக்கூடிய வயல் மற்றும் விவசாய நிலங்களை காவல் காக்கும் உயர்ந்த சிறப்பான பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. சில சேர்வைகார காவல்காருடைய சிற்பம் அவர்களுடைய மனைவிமார்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் சத்திரத்தில் கல்லாலான மேற்கூரையில் 3 படைப்பு சிற்பமும் காணப்படுகிறது. அதில் நான்கடி கொண்ட மீன், பாம்பை விழுங்கும் பறவை, தரையில் விழுந்து வணங்கும் மனித புடைப்பு சிற்பமும் காணப்படுகிறது. இந்த புடைப்புச் சிற்பம் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சத்திர திருப்பணியின் போது வேறு எங்கிருந்தோ கொண்டுவந்து மேற்கூரையாக வைத்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இக்கோயிலை ஒட்டி சத்திரம், தோப்பு, கிணறு ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து வழிபாடு செய்வதற்கும், வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறிச் செல்லும் விதமாக உணவு சமைத்து சாப்பிட்டு செல்லவும் ஆவண செய்திருக்கிறார்கள். இன்றுவரை சரியான வாகன போக்குவரத்து இல்லாத பகுதியில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே அழகர் ஆற்றில் இறங்கும் போது வழிபடுபவர்களுக்கும், வழிப்போக்கர்கள் அறப்ணிகள் செய்து வந்தது சேர்வைக்கார சமுதாய மக்களின் உயர்ந்த தயாள குணத்தை காட்டுகிறது. இக்கோயிலிலும், சத்தத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் முன்னாள் தமிழக தொல்லியல் துறை உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தின் துணையோடு படிக்கப்பட்டது. முதல் கல்வெட்டில் 7வரிகளும் இரண்டாவது கல்வெட்டில் 11 வரிகளும் மூன்றாவது கல்வெட்டில் 7 வரிகளும் நான்காவது கல்வெட்டில் 12 வரிகளும் ஐந்தாவது கல்வெட்டில் 5 வரிகளில் ஆறாவது கல்வெட்டில் 6 வலிகளும் வரிகளும் ஏழாவது கல்வெட்டில் ஒன்பது வழிகள் எட்டாவது கல்வெட்டில் எட்டு வழிகளும் ஒன்பதாவது கல்வெட்டில் பன்னிரண்டு வரிகளையும் கொண்டுள்ளன. என பேராசிரியர் தெரிவித்தனர்.