ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வழிபடும் விநோதத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2022 04:01
காரைக்குடி: கல்லல் அருகேயுள்ள தேவபட்டு கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வழிபடும் பாரம்பரிய வினோத பொங்கல் திருவிழா நடந்தது.
கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவபட்டு கிராமத்தினர் ஆண்டுதோறும் நெல் அறுவடைக்கு பின்பு அந்தரநாச்சியம்மனுக்கு நன்றி சொல்லும் விதத்தில் செவ்வாய் பொங்கல் வைத்து வழிபாடு செய்து மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். பாரம்பரியமான இவ்விழாவில் பெண்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். தேவபட்டு கிராமத்தை சேர்ந்த ஆண்கள், கிராமத்தில் இருந்து மண்பானைகள், காய்கறிகளுடன் ஊர்வலமாக மணிமுத்தாறு ஆற்றை வந்தடைவர். ஆற்றின் கரையில், ஊற்று தோண்டி பனை ஓலையில் தண்ணீர் அள்ளி மண்பானையை நிரப்புவர். பின்பு, ஊர்வலமாக அந்தர நாச்சியம்மன் கோயில் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவர். நேற்று ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு நடைபெறும் பாரம்பரிய பொங்கல் விழா நடந்தது. தொடர்ந்து, மஞ்சுவிரட்டு விழாவும் நடந்தது. பாரம்பரியமாக நடைபெறும் இந்த பொங்கல் விழாவால், கால்நடைகளும் விவசாயமும், பன்மடங்கு செழிக்கும் என்பது தங்களது நம்பிக்கை என கிராம மக்கள் தெரிவித்தனர். இதில் கல்லல், காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.