வடமதுரை: வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் 81வது ஆண்டாக கிராம திருவிழா போல குருபூஜை விழாவை கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி மக்கள் நடத்தினர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. தனது 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலத்திற்கு சென்றார். அங்குள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரை வந்தார். பின்னர் காணப்பாடி கிராமம் புதுப்பட்டியில் கள்ளிமரத்தடியில் தங்கிய அவர் மீது மட்டும் மழை நீர் பெய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் ஏதோ மகத்துவம் இருப்பதாக எண்ணி பக்தி கொண்ட மக்கள், ‘கள்ளியடி சுவாமிகள்’ அழைத்தனர். கிராமத்தில் தங்கி தங்கி கிராம நலனுக்காக பல நல்ல காரியங்களை செய்த அவர் 21–1–1941ல் மகாசமாதி அடைந்தார். அவரது நினைவாக இங்கு கோயில் கட்டியுள்ள கிராம மக்கள் ஆண்டுதோறும் திருவிழா போல குரு பூஜை விழா நடத்துகின்றனர். வழக்கமாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களை கிராம மந்தையில் அமர வைத்து புளியோதரை பிரசாதம் வினியோகம் நடக்கும். அனைவருக்கும் பிரசாதம் கிடைத்ததும் மாலையில் அரோகரா.. கோஷத்துடன் கலைந்து செல்வர். தற்போது கொரோனா தொற்று பிரச்னை இருப்பதால் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முதன்முறையாக மதியம் துவங்கி ‘பப்பே’ முறையில் பிரசாதம் வழங்கி பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அனைவருக்கும் ஊர் கிராம மக்கள் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது.