பதிவு செய்த நாள்
27
ஜன
2022
03:01
புட்டபர்த்தி:புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பெயரில் ஆந்திராவில் புதிய மாவட்டம் அமைக்கும் முயற்சிக்கு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. தற்போது 13 மாவட்டங்கள் உள்ள நிலையில், புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்க உள்ளதாக மாநில அரசு நேற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பெயரிலும் ஒரு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தலைமையிடமாக புட்டபர்த்தி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை வரவேற்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் 73வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க தினத்தில், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் உருவாக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்த மாவட்டம் 7,771 கி.மீ., பரப்பளவுடன், 17.22 லட்சம் மக்கள் தொகை உடையதாக இருக்கும். இந்த மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளும், புட்டபர்த்தி உட்பட மூன்று வருவாய் கோட்டங்களும் இருக்கும் என, அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு அறக்கட்டளை நன்றியை தெரிவித்து கொள்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன், கற்காலத்துக்கு கல்வீசும் தொலைவில் உள்ளதாக, புட்டபர்த்தி குறித்து கூறுவர். ஆனால் பகவான் சத்ய சாய்பாபாவின் உண்மையான அன்பு, அரும்பணிகள் மூலம் இந்த உலகுக்கு தன்னலமற்ற சேவையின் உந்துகோலாக புட்டபர்த்தி தற்போது உள்ளது. அவரது 97வது பிறந்தநாளைக் கொண்டாட துவங்கும் நிலையில் மாநில அரசின் அறிவிப்பு, அனைத்து சாய் பக்தர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.