பதிவு செய்த நாள்
28
ஜன
2022
08:01
கோவை: காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடத்தில் அங்காள பரமேஸ்வரர், பரமேஸ்வரி அன்னையின் திருக்கல்யாண உற்சவம் தொடர்ந்து நேற்று குண்டம் திருவிழா கோலாகலமாக நடந்தது.
கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் கோவிலில், மகாசக்தி அங்காளபரமேஸ்வரி அன்னையின், 41ம் ஆண்டு திருக்கல்யாண மகா உற்சவம், குண்டம் திருவிழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் விநாயகர் வேள்வி, அம்மன் அபிஷேகம் என, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.நேற்று முன்தினம் இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை, அங்காள பரமேஸ்வரர், அங்காள பரமேஸ்வரி அன்னையின் திருக்கல்யாண உற்சவத்தில், அன்னைக்கு திருமாங்கல்யம் சாட்டப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணியளவில் குண்டம் அக்னி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, தீமிதி உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு பெண்கள், 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று காலை, 8:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி பரவசமடைந்தனர்.தொடர்ந்து, நோயில் இருந்து குணமடைந்தவர்கள், மூடிய குண்டத்தில் உப்பு செலுத்தி வழிபட்டனர். குடியரசு தினத்தையொட்டி பீடத்தில் உள்ள பாரத மாதாவுக்கு, சிறப்பு வழிபாடும் நடந்தது.கொரோனா ஒழிய சிறப்பு பூஜையும் இடம்பெற்றது. நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் உடன், அன்னதானம் வழங்கப்பட்டது.