திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கோலாகலமாக துவங்கியது. நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாள் சந்நிதியில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு முளைக்கட்டு திருவிழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. நான்காம் திருநாள் 16ம் தேதி பகல் 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளை உலா வந்து மீண்டும் கோயிலை வந்தடைகிறார்.ஆடிப்பூரம் 10ம் திருநாள் 22ம் தேதி இரவு 7.57 மணி முதல் 8.17 மணி வரை ஊஞ்சல் மண்டபத்தில் முளைக்கட்டுத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி யக்ஞநாராயணன், ஊழியர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.