பதிவு செய்த நாள்
17
ஜூலை
2012
10:07
திருச்சி: ஆடி மாத முதல் பிரதோஷத்தை முன்னிட்டு, திருச்சியில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமான், விஷத்தின் தாக்கத்தால் சோர்வுற்ற சிவன், புத்துணர்வு அடைந்து திருநடனம் புரிந்த காலமே பிரதோஷக்காலம் எனப்படுகிறது. இந்நேரத்தில், நந்திதேவரின் கொம்புகளுக்கு இடையில் சிவனை தரிசிப்பது விஷேசமாக கருதப்படுகிறது.குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, பூரம், வெள்ளிக்கிழமை ஆகியன திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதப்பிறப்பன்று வரும் பிரதோஷம் வெகு சிறப்பானது என சைவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆடி மாத முதல் பிரதோஷம், திருச்சி மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், கரியமாலீஸ்வரர், உறையூர் பஞ்சவர்ண ஸ்வாமி, கீழரண் சாலை பூலோகநாதர் ஸ்வாமி உள்பட திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களில் சிறப்பாக நேற்று கொண்டாடப்பட்டது.பிரதோஷ காலத்தின்போது நந்தியம்பெருமான் மற்றும் மூலவர் சிவனுக்கு, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.பின்னர் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சி உறையூர்: பஞ்சவர்ண ஸ்வாமி கோவிலில், ஆடி மாத முதல் பிரதோஷத்தையொட்டி, நந்தியம்பெருமானுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
*விஷ்ணு கோவிலும் விசேஷம்: காலைக்கும் மாலைக்கும் இடைப்பட்ட பிரதோஷ காலத்தில் அவதரித்தவர் நரசிம்மர். இதனால், பிரதோஷத்தின்போது நரசிம்மர் கோவில்களில் வைணவ பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர், ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கர் உள்ளிட்ட திருச்சியில் உள்ள நரசிம்மர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் பிரதோஷத்தின்போது நரசிம்மரை வழிப்பட்டனர்.