ராமேஸ்வரம்: ஆடித்திருக்கல்யாண தபசு விழாவை முன்னிட்டு ஜூலை 23 ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண விழாவின் 11 ம் நாளில் ஆடித்தபசு நிகழ்ச்சி ஜூலை 23 ல் நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று இரவு 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலை 3 முதல் 4 மணி வரை ஸ்படிலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து கால பூஜைகள் முடிந்த பின் காலை 6 மணிக்கு பர்வதவர்த்தனி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறார். மதியம் 12 மணிக்கு ராமநாதசுவாமி தங்கரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருள சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் வைபவம் நடக்கிறது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி கோயிலுக்கு திரும்பியவுடன் வழக்கமான பூஜைகள் நடைபெற்று இரவில் அம்பாள் பூப்பல்லக்கில் வீதிஉலா வருகிறார். இதையொட்டி அன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் பக்தர்கள் கோயிலுக்குள் தீர்த்தமாடவும், சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை என்று கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் தெரிவித்தார்.