பதிவு செய்த நாள்
21
ஜூலை
2012
10:07
நகரி: திருமலையில் சுவாமியை தரிசிக்க இலவச வரிசையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, 300 ரூபாய் சிறப்பு தரிசன "டிக்கெட் மற்றும் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் "டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை குறைக்க, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருமலையில் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய, உலகின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இலவச வரிசையில் தரிசிக்க தினமும், 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையும், சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனத்திற்காக, திருமலையில் குவிகின்றனர். அதிகளவு பக்தர்களால் தினமும், 20 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருக்கின்றனர். பாதயாத்திரையாக வருவோர் மற்றும், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிப்பதால், இந்த நாட்களில் இலவச தரிசனத்திற்கு நிற்கும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். தங்கும் விடுதி வசதி, இதர செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.இதையடுத்து, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமுள்ள நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன "டிக்கெட்டுகளை, 15 ஆயிரம் பேருக்கும், அலிப்பிரி, ஸ்ரீவாரி வழியாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களில், 22 ஆயிரம் பேருக்கும் திருமலையில் சுவாமி தரிசன "டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. தேவஸ்தானத்தின் இந்த புதிய ஏற்பாட்டால், இலவசமாக சுவாமியை தரிசிப்பவர்கள் விரைவில் தரிசனம் செய்யலாம்.