பதிவு செய்த நாள்
23
ஜூலை
2012
10:07
புதுச்சேரி: ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, முதல் ரத யாத்திரை நிகழ்ச்சி சண்முகாபுரம் வி.பி., சிங் நகரில் நேற்று நடந்தது.ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு வரும் 2017ல் சித்திரை திருவாதிரையில் வருகிறது. அதையொட்டி, புதுச்சேரியில் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு உருவாக்கப்பட்டு கடந்த மே மாதம் திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் தலைமையில், வேலுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் மூன்று நாள் உபன்யாசம் நடந்தது. தொடர்ந்து விழாக்குழு சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளாக நகர சங்கீர்த்தனம், வீடு மற்றும் பெருமாள் கோவில்களில் பஜனை, ஆச்சாரியன், ஆழ்வார்கள், ஆண்டவன், திருநட்சத்திரத்தில் பிரபந்த சேவை, ரத யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன."முதல் ரதயாத்திரை சண்முகாபுரம் வி.பி.சிங் நகரில் உள்ள ஆதிசக்தி அம்மன் கோவிலில் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றது. வெங்கடாஜலபதி பஜனை கூடம், பாண்டவ தூதன் சங்கீர்த்தன சபா, லலிதா பஜனா மண்டலி, பாண்டுரங்க ராமாயி ஆன்மீக கைங்கர்ய சபா, பெரியாழ்வார் தொண்டு சபை, நம்மாழ்வார் பஜனை சபை, வணிக வைசிய ஹரி ஹர பஜனை மடம் ஆகிய பஜனை குழுவினர் கலந்துகொண்டனர்.மாலை 6 மணிக்கு ஜெகதீசன் தலைமையில் பஜனை, இரவு 7 மணிக்கு சாந்தலட்சுமி-ராமச்சந்திரனின் உபன்யாசம், இரவு 8 மணிக்கு டாக்டர் ஜோசப் உபன்யாசம் நடந்தது.