பதிவு செய்த நாள்
23
ஜூலை
2012
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தின் போது அணிவிப்பதற்காக, ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டுப் புடவை நேற்று வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து, திருப்பதி வெங்கடாஜலபதிக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போதும், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போதும், ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்தின் போதும், ஆண்டாளுக்கு சார்த்தப்பட்ட பரிவட்டம், மாலை வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், ஆண்டாள் கோவில் ஆடித்தேரோட்டத்தின் போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வழங்குவதும், வழக்கமாக இருந்து வருகிறது. ஆண்டாள் ஆடித்தேரோட்டம் இன்று நடப்பதையொட்டி, நேற்று காலை ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையாளர் மாரியப்பன் தலைமையில், ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வாருக்கு சார்த்துவதற்கான பட்டு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஸ்தானிகம் ரமேஷ், வேதபிரான்பட்டர் சுதர்சனன் உட்பட, கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.