பதிவு செய்த நாள்
25
ஜூலை
2012
10:07
மேட்டுப்பாளையம்: வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிகுண்டம் விழாவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.மேட்டுப்பாளையம் அருகே உள்ள, வன பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிகுண்டம் திருவிழா, கடந்த 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராமசந்தி நிகழ்ச்சியும், 22ல், கொடியேற்றமும், மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. 23ம் தேதி மாலை, 5.00 மணிக்கு, பொங்கல் வைத்து, திருக்குண்டம் திறக்கப்பட்டது.விழாவின் முக்கிய நாளான நேற்று, ஆடிகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை, 3.00 மணிக்கு, கோவில் அருகே உள்ள பவானி ஆற்றிலிருந்து, அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பவனி வந்தார். இதன் பின், கோவில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த திருக்குண்டம் முன், அம்மன் வந்ததும், காலை, 6.00 மணிக்கு தலைமை பூசாரி குமரேசன், குண்டத்தில் மலர் பந்து உருட்டி, தீ மிதித்தார். இதன் பின், கோவில் பூசாரிகள் ஒவ்வொருவராக தீ மிதித்தனர்.இதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் இரவிலிருந்தே, கோவிலுக்கு வந்திருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, கையில் வேப்பிலையுடன், பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, பக்திப் பெருக்குடன் பங்கேற்றனர். பகல் 11 மணி வரை நடந்த தீ மிதிக்கும் நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வந்திருந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.