பதிவு செய்த நாள்
31
ஜூலை
2012
10:07
ஒருசமயம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றினார்கள். மனிதன் கியாம நாளில் இறைவன் முன் நிறுத்தப்படுவான். அப்போது இறைவன் அவனைப் பார்த்து"நான் நோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? என்பான். "தாகத்துடன் உன் முன் நின்று தண்ணீர் கேட்டேன். ஏன் எனக்குத் தரவில்லை? என்பான். அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? என்றார். உடனே ஒருவர் எழுந்து, அண்ணலாரே! இறைவன் அப்படிக் கேட்டால் எல்லா உலகங்களுக்கும் தலைவன் நீ. உன்னை நோயோ, பசியோ, தாகமோ எப்படி தாக்கும்? அப்படி இருக்கையில் எங்களைக் குறை சொல்வது நியாயமா? எனக்கேட்பேன், என்றார். அதற்கு நபிகளார் அவர்கள்,""ஒரு மனிதனின் பெயரை இறைவன் குறிப்பிட்டு, "அவன் நோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தது உனக்குத் தெரியாதா? நீ ஏன் அவனுக்கு ஆறுதல் சொல்வதற்காக செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால், அவனிடத்தில் என்னைப் பார்த்திருப்பாயே! என்பான். மற்றொரு மனிதனின் பெயரைக் குறிப்பிட்டு,"அவன் உன்னிடம் பசி என்று உணவு கேட்கவில்லையா? நீ ஏன் அவனுக்கு உணவு தரவில்லை? என்பான். அதற்கு நீ என்ன பதில் வைத்திருக்கிறாய்? என்று கேட்டார். அந்த மனிதன் தலை குனிந்தான். அவனை அமரச்சொன்ன நபிகளார் கூட்டத்தினரைப் பார்த்து,""எல்லோரையும் நம் சகோதரர்களாகக் கருதி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டு, என்றார்கள். இந்த ரமலான் நோன்பு காலத்தில், பசியின் அருமையை நாம் உணர்ந்திருக்கிறோம். மற்றவர்களுக்கு உதவும் பண்பை இந்தக்காலத்தில் வளர்த்துக் கொள்வோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29