Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
வறண்ட காவிரியில் ஆடி பெருக்கு: மக்கள் ஏமாற்றம்!
ஜூலை 31,2012
அ-
+
Temple images

மேட்டூர்: கடந்த ஆறு ஆண்டாக, ஆடிபெருக்கு பண்டிகையின்போது, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், நடப்பாண்டு காவிரி வறண்டு போனதால், ஆடிப்பெருக்கு கொண்டாடும், டெல்டா மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து, காவிரியில் திறக்கும் நீரின் மூலம், 11 டெல்டா மாவட்டங்களில், 16.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12ல் துவங்கி தொடர்ச்சியாக, ஏழு மாதம் நீர் திறப்பதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.

பாசனத்திற்கு திறப்பு: ஆகஸ்ட் முதல்வாரம், ஆடிபெருக்கு பண்டிகையின் போது, டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் மக்கள், விவசாயிகள் குடும்பத்துடன் காவிரியில் புனித நீராடி, காவிரியன்னையை வழிபாடு செய்வது வழக்கம். 2005ல் டெல்டா பாசனத்துக்கு, ஆக.,4ம் தேதி நீர் திறக்கப்பட்டது. எனினும், டெல்டா மாவட்ட பக்தர்கள் ஆடிபெருக்கு பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்காக காவிரியில் ஒருவாரம் ஸ்பெஷலாக நீர்திறக்கப்பட்டது. கடந்த, 2006ல் குறித்தபடி ஜூன் 12ம் தேதியும், 2007ல் ஜூலை 18ம் தேதியும், 2008ல் ஜூன் 12ம் தேதியும், 2009, 2010 என, இரு ஆண்டுகளில் ஜூலை 28ம் தேதியும் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் ஆடிபெருக்கு நாளில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கரையோர மாவட்ட மக்கள் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர்.

உத்தரவு வரவில்லை: ஆனால், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தவறியதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு, 36.730 டி.எம்.சி.,யாக குறைந்து விட்டது. நீர் இருப்பு குறைவாக இருந்ததால், டெல்டா குறுவை சாகுபடிக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை. எனினும், ஆடிபெருக்கு பண்டிகைக்காக காவிரியில் நீர்திறக்கப்படும் என, கரையோர மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர். வரும் 2ம் தேதி ஆடிபெருக்கு பண்டிகை என்பதால், ஒரு வாரம் முன்னதாக காவிரியில் நீர் திறந்தால் மட்டுமே, ஆடிபெருக்கு நாளில் காவிரி கடைமடை பகுதியை தண்ணீர் சென்றடையும். ஆடிபெருக்கு பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக அரசு எந்தவித உத்தரவும் வெளியிடவில்லை. ஆறு ஆண்டுக்கு பின் ஆடிப்பெருக்கு சமயத்தில் காவிரியாறு வறண்டு காணப்படுவது, கரையோர மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.