பதிவு செய்த நாள்
01
ஆக
2012
10:08
சபரிமலை : ஒவ்வொரு மாதமும் மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆனால், இம்மாதம் மட்டும் மூன்று முறை நடை திறக்கப்படும்.
கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருவது வழக்கம். இந்த கோவிலில், மாதந்தோறும் மாத பூஜைகளுக்காகவும், உற்சவங்களுக்காகவும் நடை திறக்கப்படுகிறது. இம்மாதம் மட்டும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, மூன்று முறை திறக்கப்படுவது என்பது அபூர்வமான ஒன்று.
கேரளாவில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த புதிய நெற்கதிர்களை கொண்டு வந்து சுவாமிக்கு செலுத்தும் நிகழ்ச்சியான, "நிறப்புத்தரி வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, கோவில் நடையை வரும் 5ம்தேதி மாலை 5.30 மணிக்கு, தந்திரி முன்னிலையில், மேல்சாந்தி திறப்பார். அன்றைய தினம் வேறு பூஜைகள் ஏதுமிருக்காது.
மறுநாள் அதிகாலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடக்கும். அப்போது விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த புதிய நெற்கதிர்களை, பதினெட்டாம்படி அருகே சுவாமிக்கு செலுத்துவர். அவற்றை மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி பெற்றுக் கொள்வார். தொடர்ந்து நெற்கதிர்கள் கோவிலைச் சுற்றிலும் கட்டி வைக்கப்படும். சிறப்பு பூஜைகள் முடிந்து அன்றைய தினம் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இதையடுத்து, ஆவணி மாத பூஜைகளுக்காக கோவில் நடை வரும் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகளான, உதயாஸ்தமனம், படி, புஷ்பாபிஷேகம், சந்தன அபிஷேகம் ஆகியவையும் நடக்கும். பூஜைகள் முடிந்து, 21ம் தேதி இரவு 10 மணிக்கு, ஹரிவராசனம் பாடல் பாடி, நடை அடைக்கப்படும்.
ஓணம் பண்டிகைக்காக, வரும் 27ம் தேதி மாலை 5.30 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். அன்றைய தினம் வேறு பூஜைகள் இருக்காது. மறுநாள் காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும். நடை திறந்திருக்கும் நாட்களில், தினமும் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகள் முடிந்து வரும் 31ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ஓண சத்யா (ஓணவிருந்து)வில் பங்கேற்பது வழக்கம்.