தென்காசி : தென்காசி மேலச்சங்கரன்கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று (1ம் தேதி) ஆடித்தபசு காட்சி நடக்கிறது. தென்காசி மேலச்சங்கரன்கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் காலை, இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கியநாளான இன்று (1ம் தேதி) காலையில் அம்பாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நடக்கிறது. மாலையில் தெற்கு ரதவீதியில் கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுத்து அரியும், சிவனும் ஒன்றே என உலகிற்கு எடுத்துக்காட்டும் தபசு காட்சி நடக்கிறது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. இரவு காட்சியும் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான நாளை (2ம் தேதி) இரவு திருக்கல்யாணம், சுவாமி-அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.