நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் அவரது தோழர் ஒருவர், ""அண்ணலாரே! எனக்கு உற்றார் உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றேன். அவர்களோ என் உறவை வெட்டி விடுகின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்கள் எனக்கு நேர்மாறானதைச் செய்கிறார்கள். நான் அவர்கள் விஷயத்தில் பொறுமையாக இருக்கிறேன். அவர்கள் அநியாயமாக நடக்கின்றனர், என்றார். அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள், ""நீர் சொல்வது உண்மையானால், அவர்கள் கேவலம் அடைவார்கள். அவர்கள் உதாசீனப்படுத்தினாலும், எதுவரை நீர் அவர்களிடம் பொறுமை காட்டி, நன்மை செய்து வருவீரோ, அதுவரை அல்லாஹ்வின் உதவி உம்மீது இருந்து கொண்டே இருக்கும், என்றார்கள். உறவினர்களை நேசித்தும் அவர்கள் உதாசீனப்படுத்தினால், அவர்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள் என்பதே இதன் பொருள். ஒற்றுமையாக இருக்க வேண்டியதின் அவசியத்தையும் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ""கூட்டாக (ஜமாத்துடன்) சேர்ந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள். ஏனெனில், தனிமையில் இருப்பவனோடு ஷைத்தான் இருக்கின்றான். சொர்க்கத்தை விரும்புபவர்கள் ஒற்றுமையைக் கடைபிடியுங்கள். ஒன்றுபட்ட கூட்டத்தினர் மீதே அல்லாஹ்வின் உதவி இருந்து கொண்டே இருக்கின்றது. நீங்கள் ஒன்றுபட்டவர்களாக ஆகி விடுங்கள், என்கிறார்கள். இன்றைய சிந்தனை உறவுகளிடம் நேசம், எல்லாரிடமும் ஒற்றுமை என்பதாக அமையட்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29