குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சிறந்த பண்புகளை கேளுங்கள். அவை உங்களிடம் இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள். * உறவை முறிப்பவர்களுடனும் உறவைத் தொடர்தல் * ஏமாற்றுபவர்களுக்கும் உதவுதல் * அநீதி இழைப்பவர்களை மன்னித்தல். இதில் மூன்றாவதான "மன்னித்தல் மிக மிக சிறந்த பண்பு. ""நீங்கள் அவர்களுடைய செயல்களை சகித்து புறக்கணித்து விடுவீர்களானால் மேலும் அவர்களை மன்னிப்பீர்களானால், திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான், என்கிறது குர்ஆன். இதிலுள்ள "அவர்களுடைய என்ற வார்த்தை எதிரிகளை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி, மக்களையும் குறிக்கிறது. ஒரு மனிதனை அவனது மனைவி புறக்கணிக்கலாம். குழந்தைகள் எதிர்க்கலாம். அவர்களுடைய அச்செயலை பெரிதுபடுத்தாமல், யாரொருவன் மன்னிக்கிறானோ, அவன் செய்த தவறுகள் இறைவனின் சந்நிதானத்தில் மன்னிக்கப்படும். அவன் மீது இறைவனின் கருணைப் பார்வை விழும். மனைவியோ, குழந்தைகளோ, எதிரிகளோ நமக்கு எதிராக நடந்தால் அவர்களை தண்டிக்கும் சக்தி நமக்கு இருக்கலாம். ஆனால், ""(தண்டிக்கும்)சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர் என்கிறது குர்ஆன். யாராயிருந்தாலும், அவர்கள் உங்களுக்கு எதிராகச் செய்த செயல்களை மன்னித்து மறந்து விட வேண்டும் என்பதை இன்றைய சிந்தனையாகக் கொள்வோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31.