சபரிமலை: விவசாய நிலங்களில் விளைந்த புதிய நெற்கதிர்களை படைக்கும்
நிறபுத்தரி உற்சவம், சபரி மலையில் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. இதற்காக
அய்யப்பன் கோவில் நடை ஞாயிறு மாலை திறக்கப்படும். கேரளா, பத்தனம்திட்டா
மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் தங்களது
நிலங்களில் விளைந்த புதிய நெற்கதிர்களை, அய்யப்பனுக்கு விவசாயிகள் படைப்பது
வழக்கம். அதேபோல், இவ்வாண்டுக்கான உற்சவம் திங்கள் கிழமை கோவிலில் நடைபெற
உள்ளது. இதற்காக கோவில் நடை ஞாயிறு மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.
அன்றைய தினம் வேறு பூஜைகள் இருக்காது. தொடர்ந்து, மறுநாள் அதிகாலை கணபதி
ஹோமத்துடன் பூஜைகள் துவங்கும். விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த
புதிய நெற்கதிர்களை தலையில் சுமந்து வந்து பதினெட்டாம் படி அருகே
காத்திருப்பர். அப்போது, மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி கோவிலில் இருந்து
வந்து, அவர்களிடம் இருந்து நெற்கதிர்களை பெற்றுக்கொண்டு பதினெட்டாம் படி
ஏறி கோவிலுக்குள் செல்வார். தொடர்ந்து, நெற்கதிர்கள் அய்யப்பனுக்கு
படைக்கப்படும். நெற்கதிர்களை சன்னிதானத்திலும் கட்டி தொங்க விடுவர்.
பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நிறப்புத்தரி உற்சவம் முடிந்து அன்றைய
தினம் இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். அடுத்து,
வரும் 16ம் தேதி மாலை ஆவணி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்படும்.