மயிலாடுதுறை: சீர்காழி சீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் சீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் புதிதாக தியான மண்டபம்,சீரடி சாய்பாபா மற்றும் குபேர மகாலட்சுமி மகாசரஸ்வதி ஜோதி ஸ்தபம் ஆகிய சன்னதிகள் நிர்மாணிக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம் செய்விக்கப்பட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. இரண்டாம் கால யாகசாலை நிறைவடைந்து பூர்ணாஹூதி மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி மேளதாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து ஜோதி மண்டப விமானம், ஸ்ரீ சாய்பாபா, குபேர மகாலட்சுமி சரஸ்வதி சந்நதி கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சீரடி சாய்பாபாவுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது. இதில் அமலாக்கப் பிரிவு காவல்துறை ஐஜி துரைகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.