பதிவு செய்த நாள்
29
ஜூன்
2022
10:06
சித்தாமூர்: சித்தாமூர் அருகே, ஜமீன்பூதுார் கிராமத்தில், பெரிய ஏரியின் அருகே, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, இரு ஆண்டுகளாக சிறிய அளவிலேயே இவ்விழா நடந்தது.தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், பழையபடி விசேஷமாக நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து, திரவுபதி அம்மன் வசந்த திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 4ம் தேதி கொடியேற்றப்பட்டது. தினமும் மாலை மகாபாரதம் சொற்பொழிவு, கட்டை கூத்து உள்ளிட்டவை நடந்தன. நேற்று மதியம் 2:30 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி துவங்கியது. கோவில் முன், களிமண்ணால் 25 அடி துரியோதனன் சிலை செய்து, பஞ்ச வண்ணம் பூசி, நாடக நடிகர்கள், பீமன்,- துரியோதனன் வேடமிட்டு, மகாபாரத போரிடும் காட்சியை நிகழ்த்தினர். பின் கூந்தல் முடித்து, திரவுபதி அம்மனுக்கு, பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.பூங்கரகம் அலங்கரித்து, கோவிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள், மாலை 6:00 மணிக்கு அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.