திருநெல்வேலி: மேலநத்தம் அருந்தபசு அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. மேலப்பாளைய ம் அருகேயுள்ள மேலநத்தம் கிராமத்தில் உள்ள அருந்தபசு அம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே 13 தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதனையடுத்து கோயில் விழா கடந்த 27ம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து இரவு அம்மனுக்கு மாக்காப்பு சிறப்பு தீபாராதனை நடந்தது.நேற்று 28ம் தேதி காலை கணபதி ஹோமம், பால் குட வீதி உலா, சிறப்பு அபிஷேகம் மற்றும் மதிய கொடை தீபாராதனை நடந்தது. மாலையில் தாமிரபரணி ஆற்றிலிருந்து கிரக குடம் வீதி உலா, பொங்கலிடுதல், இரவு முளைப்பாரி வீதி உலா, அலங்கார தீபாராதனை, மது பொங்க வைத்தல் நடைபெற்றது. நள்ளிரவில் அம்மனுக்கு படையல் தீபாராதனை நடந்தது. விழாவில் மேலநத்தம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மின் விளக்கு அலங்காரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் சப்பர வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.