ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்த தார்பாரில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2022 09:06
தஞ்சாவூர், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில், தர்பாரில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டத்தை நினைவு கூறும் விதமாக, நேற்று மந்திராலய பீடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர சுவாமிகளால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
கடந்த 1621ம் ஆண்டு தஞ்சை நகரத்தில் வடவாற்றங்கரையில் சன்னியாச தீட்சைப் பெற்று வேதாந்த சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் ஸ்ரீ ரகுநாத பூபால நாயக்க மன்னர் முன்னிலையில் நடந்தது. அன்றில் இருந்து "ஸ்ரீராகவேந்திரர்" என்ற பெயருடன் திகழ்ந்தார். தஞ்சையில் ஏற்பட்ட வறுமையை போக்கி சுமார் 12 ஆண்டுகள் இந்த பிருந்தாவனம் அமைத்துள்ள இடத்தில் தவம் புரிந்தார். தவத்தின் மூலம் கிடைத்த வலிமையை மற்ற தேசங்களில் மக்களுக்கும் அளிக்கும் பொருட்டு தேசசஞ்சாரம் புறப்பட்டார். ராகவேந்திரர் தஞ்சையை விட்டு புறப்பட்ட சில காலங்களிலேயே தஞ்சை மன்னருக்கு அவரின் பிரிவால் சில இன்னல்கள் ஏற்படுகின்றன. எனவே ஸ்ரீராகவேந்திரர் என்றென்றும் தஞ்சை மண்ணிலேயே தன்னுடன் வசிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறார். அரசரின் வேண்டுகோளுக்கு செவிமடுத்த ஸ்ரீராகவேந்திரர் “நான் 12 ஆண்டுகள் தவம் செய்த இடத்தில் பிருந்தாவனம் அமையுங்கள். நான் அங்கு என் சூட்சம் சரீரத்தால் என்றென்றும் வாழ்ந்து தஞ்சைக்கு அருள்புரிவேன்” என கூறியதால், நாயக்க மன்னரால் பிருந்தாவனம் நிறுவப்பட்டது.
அதே சமயம் அரண்மனை வளாகத்தில் உள்ள தர்பாரில், ரகுநாத பூபால் மன்னரால் ராகவேந்திருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை நினைவு கூறும்விதமாக நேற்று தர்பாரில், மகாலில், ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு, மந்திராலய பீடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர சுவாமிகள், ஸ்ரீ ராமர் பீடத்தினை வைத்து சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் அருள் ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா சி.போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பின்னர் வடவாற்றில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்திலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.