பதிவு செய்த நாள்
30
ஜூன்
2022
04:06
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை. 30- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான செண்பகத்தோப்பிற்கு செல்பவர்களிடம் வனத்துறை சார்பில் ரூபாய் 20 சேவை கட்டணம் வசூலிப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு பகுதி ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமானதாகும். இங்குள்ள வனப்பேச்சி அம்மன் மற்றும் காட்டழகர் கோயிலில் உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். மழை பெய்து பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டால் பொதுமக்கள் குளிப்பதற்கு வருவது வழக்கம்.
இவ்வாறு வருபவர்களின் டூ வீலர், ஆட்டோ, கார், வேன் வாகனங்களுக்கு மட்டுமே இதுவரை கோயில் நிர்வாகம் சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக செண்பகத்தோப்புக்கு வரும் பொதுமக்களிடம் ஒரு நபருக்கு ரூ. 20 வீதம் வனத்துறை சார்பில் சேவைக்கட்டணம் வசூலித்து வருகிறது. இது பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியையும், மனவேதனையும் அளித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் கழிவுகளை அப்புறப்படுத்த, வனம் சூழல் மேம்பாட்டு குழு மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான செலவினங்களுக்காக சேவை கட்டணமாக ரூபாய் 20 வசூலிக்கப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான தோப்பிற்குள் செல்வதற்கு ஏற்கனவே கோயில் நிர்வாகத்தின் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது வனத்துறை சேவைக் கட்டணம் வசூலிப்பது சரியானது அல்ல, ஒரே இடத்திற்கு இரு அரசுத்துறைகள் கட்டணம் வசூலிப்பது தவறு என பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் கேட்டபோது, வனத்துறையின் இத்தகைய நடவடிக்கை சட்டபூர்வமாக சரியானது தானா என்பது குறித்து வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டு உள்ளோம். அதன்பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நூற்றாண்டு காலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர நகரமக்களின் ஒரே பொழுதுபோக்கு, ஆன்மிக இடமாக விளங்கிய செண்பக தோப்பிற்க்கு செல்ல, தற்போது சேவை கட்டணம் வசூலிப்பது அரசின் மீது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.