பதிவு செய்த நாள்
05
ஜூலை
2022
11:07
பாகூர் : பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடைபெற்றது. நேற்று காலை 4.00 மணிக்கு, பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6.00 மணிக்கு கொடி மரத்திற்கு கலச அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது. அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் தினமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 10ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 12ம் தேதி தேர் திருவிழா, 13ம் தேதி முருகன் வள்ளி தெய்வானை தெப்பல் உற்சவமும், 14ம் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது.