பதிவு செய்த நாள்
05
ஆக
2022
05:08
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் இரட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மூன்றாவது வெள்ளி அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சீர்காழி சட்டைநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவை காவடி உடன் கரகம் புறப்பட்டு தேர் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கோவிலை வந்து அடைந்தது. பின்னர் இரட்டை காளியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், தேன், திரவிய பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வீதி உலா காட்சியும் அதனைத் தொடர்ந்து கோவிலில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் இரவு வீதி உலா கட்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.