பதிவு செய்த நாள்
06
ஆக
2022
09:08
மேட்டுப்பாளையம்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
மேட்டுப்பாளையம் அடுத்த, ஊமப்பாளையத்தில் பன்மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு, பவானி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால் குடங்களை கோவிலுக்கு எடுத்து வந்தனர். மதியம் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்த பின்பு, அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பால் குடங்களை எடுத்து வந்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் கவுடர் செல்வராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். மேட்டுப்பாளையம் காட்டூரில், தவிட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மூன்றாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து பூசாரி லோகேஸ்வரன் கூறுகையில், அம்மனுக்கு, 12 ஆயிரம் வளையல்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் குழுவினர் இரவு முழுவதும் வளையலை, நூலில் கோர்த்தனர். காலையில் ஆறு மணிக்கு நடை திறந்த பின்பு, சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம், அம்மனுக்கு வளையல்களில் அலங்காரம் செய்யப்பட்டது. வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர், என்றார்.