பதிவு செய்த நாள்
07
ஆக
2022
02:08
புதுடில்லி : கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராம்லீலா நிகழ்ச்சிகள் மந்தமாக இருந்த நிலையில், இந்தாண்டு அதை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.தசரா பண்டிகையையொட்டி, புதுடில்லியில் உள்ள செங்கோட்டை மைதானத்தில் ராம்லீலா நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் இறுதி நாளில், தீமையை நன்மை வென்றதை உணர்த்தும் வகையில் ராவணன் உருவபொம்மையை, ஹிந்துக் கடவுள் ராமர் அம்பு விட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.இந்த ராம்லீலா நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கும். வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது வழக்கம். கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகள் மந்தமாக இருந்தன.
தற்போது கொரோனா குறைந்திருக்கும் நிலையில், இந்தாண்டு நிகழ்ச்சியை பிரமாண்டமாக கொண்டாட, லவ குச ராம்லீலா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.வரும், செப்., 26 முதல் அக்., 6ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. இந்த மேடை மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்கும். அதன் மீது, உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் மாதிரி வைக்கப்பட உள்ளது.
கிரேன்கள் உதவியுடன் நடிகர்கள் பங்கேற்கும் வகையிலான காட்சிகளும் இடம்பெற உள்ளன. மேலும், 3டி எனப்படும் முப்பரிமாண முறையில் காட்சிகள் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.வழக்கமாக, 25 ஆயிரம் பேர் மட்டுமே அமர்ந்து பார்க்கும் வசதி செய்யப்படும். தற்போது, 40 ஆயிரம் பேர் அமரக் கூடிய வகையில் பார்வையாளர் மேடை அமைக்கப்பட உள்ளது.
இதையடுத்து இப்போதே, மேடை அமைப்பது போன்றவற்றுக்கான ஆரம்ப பணிகள் துவங்கிவிட்டன. மேலும், 10 நாட்கள் நடக்க உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகளும் துவங்கிஉள்ளன.