வடமதுரை கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2022 04:08
வடமதுரை: வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் வினோதமாக நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.
பி.கொசவபட்டி ஊராட்சி எட்டிகுளத்துபட்டியில் குறும்ப கவுண்டர் கெங்கை குல பங்காளிகளின் குல தெய்வ கோயிலான சித்தண்ணன், கசுவம்மாள் கோயில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் திருவிழா துவங்கியது. இன்று காலை முதலியார் குளத்தில் இருந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு இ.புதுார் வழியே சேர்வை ஆட்டத்துடன் சன்னதிக்கு ஊர்வலமாக வந்தனர். கோயில் முன்பாக விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அமர்ந்தனர். பூசாரி நாகராஜன் வழக்கமான பாரம்பரிய வழிபாடுகளை முடித்து நேர்த்திக்கடன் வழிபாட்டிற்காக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். பின்னர் சேர்வைகாரரிடம் பக்தர்கள் ஒவ்வொரு சாட்டையடி பெற்று சென்றனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை பக்தர்களும், குழுமியிருந்தவர்களும் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என கோஷமிட்டபடி இருந்தனர். வினோத வழிபாட்டை காண ஏராளமான கிராம மக்கள் கூடியிருந்தனர்.