மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் ஆடித்தபசு சப்பர திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2022 08:08
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழாவில் சப்பரத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 31ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், அன்னம்,கமலம், யானை,கிளி விருஷபம் காமதேனும்,குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும்,பூப்பல்லக்கு,சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு இன்று நடைபெற உள்ள நிலையில் நேற்று ஆடித்தபசு சப்பரத்திருவிழாவை முன்னிட்டு அம்மன் மாலை 3 மணிக்கு சப்பரத்திற்கு எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.சன்னதி புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சப்பரத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பின்னர் சப்பரத்தை 5:35மணிக்கு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர்.இன்று மாலை கால்பிரவு கிராமத்தார்கள் மண்டகப்படியில் ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளது.