கோடீஸ்வரராகிறார் தூத்துக்குடி பெருமாள்: கோயில் பெயரில் ரூ.28 கோடி டெபாசிட்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2012 10:08
தூத்துக்குடி: தூத்துக்குடி பெருமாள் கோயில் பெயரில் 28 கோடி ரூபாய் ஸ்டேட் பாங்க் பீச் ரோடு கிளையில் மூன்றாண்டுகளுக்கு 10.2 சதவீத வட்டியுடன் டெபாசிட் செய்யப்பட்டது. மாதம் 20 லட்ச ரூபாய் வட்டி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த பணத்தின் மூலம் பெருமாள் கோயிலுக்கு நல்ல காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம் சமீபத்தில் நீதிபதி முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 28 கோடியே 51 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயிற்கு ஏலம் போனது. இதில் கோர்ட் செலவினங்கள் உள்ளிட்ட பல செலவினங்கள் போக மீதியுள்ள 28 கோடியே 10 லட்சத்து 82 ஆயிரத்து 777 ரூபாய் பணத்தை பாங்க்கில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக கோயில் வக்கீல் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது; வைகுண்டபதி பெருமாள் கோயிலுக்குரிய ஏலம் விடப்பட்ட இடத்திற்குரிய பணத்தை மாவட்ட முதன்மை நீதிபதி பிரபுதாஸ் உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியா பீச் ரோடு கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது. மொத்தம் மூன்று ஆண்டுகளுக்கு இதற்கான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மூன்றாண்டு முடிவில் மொத்தம் 10.2 சதவீத வட்டியுடன் சேர்த்து மொத்தம் 36 கோடியே 71 லட்சத்து 8 ஆயிரத்து 158 ரூபாய் கிடைக்கும். மாதத்திற்கு 20 லட்ச ரூபாய் வரை வட்டி கிடைக்கும். வைகுண்டபதி பெருமாள் கோயில் என்கிற பெயரில் தான் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
வட்டி தொகையை மாதம், மாதம் கோயில் நிர்வாகம் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோயில் நிர்வாகம் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொள்ளலாம். இந்த பணத்தை கோயிலில் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வக்கீல் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இந்த டெபாசிட் மூலம் இதுவரை ஏழையாக இருந்த பெருமாள் பணக்கார பெருமாளாக மாறி விட்டார். ஏற்கனவே வைகுண்டபதி பெருமாள் கோயிலில் அனைத்து விழாக்களும் நல்ல முறையில் நன்கொடையாளர்கள் மூலம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இன்னும் இந்த விழாக்களை மிகப் பெரிய அளவில் விழாக்களை நடத்தலாம். அதோடு கோயிலுக்கு என்று தேர் இல்லை. புதியதாக தேர் செய்யலாம். புதியதாக ராஜகோபுரம் கட்டலாம். கோயிலுக்கு முன் பகுதியில் மண்டபம் கட்டலாம். இன்னும் கோயிலுக்கு தேவையான எண்ணற்ற பணிகளை இதன் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையில் அறநிலையத்துறையின் உத்தரவுப்படி மிகப் பெரிய அளவில் வரக் கூடிய டெபாசிட் பணத்தை பல்வேறு பாங்குகளில் டெபாசிட் செய்ய வேண்டும் என்கிற நிலை இருப்பதாக கூறப்படுகிறது. எந்த பாங்க்கில் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும் என்கிற அளவு குறியீடும் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு பாங்குகளிலும் பிரித்து தான் டெபாசிட் செய்ய வேண்டும். இதனால் இது சம்பந்தமாக கோயில் நிர்வாகம் சார்பில் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான பணிகள் தற்போது கோயில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நல்லகாரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என அறிவுரை.