பதிவு செய்த நாள்
11
ஆக
2022
10:08
தொண்டாமுத்தூர்: மாதம்பட்டியில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கிருஷ்ணர் சிலை தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும், 19ம் தேதி நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி அன்று, கோவில்கள், வீடுகளில், கிருஷ்ணர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இதனையொட்டி, தொண்டாமுத்தூர் அடுத்த மாதம்பட்டியில் உள்ள பொம்மை சிலை தயாரிக்கும் இடத்தில், கிருஷ்ணர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து மாதம்பட்டியை சேர்ந்த கைவினை பொருட்கள் தயாரிப்பாளரும், கைவினை கலைஞருமான, ஜெய்சூர்யா கூறுகையில்," எங்கள் குடும்பத்தினர், 150 ஆண்டுகளுக்கு மேலாக கைவினை சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். நான், பொறியியல் பட்டதாரி. தற்போது, நான் நான்காவது தலைமுறையாக, கைவினை சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
நாங்கள் அனைத்து தெய்வங்களின் சிலைகளையும், காகித கூழால் தயாரித்து வருகிறோம். தற்போது, கிருஷ்ண ஜெயந்தி வருவதால், கிருஷ்ணரின் குழந்தை பருவம் முதல் திருமணம் வரை உள்ள அனைத்து விதமான கிருஷ்ணர் சிலைகளும் செய்து வருகிறோம். அதனைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா உள்ளிட்டவைகள் வருவதாலும், அதற்கும் சிலைகளை தயாரித்து வருகிறோம். எங்களிடம், கிருஷ்ண ஜெயந்திக்கான சிலை, 3 இன்ச் முதல் 4 ½ அடி உயரம் வரை உள்ளது. அதேபோல, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, 3 இன்ச் முதல் 1 ½ அடி வரையும், நவராத்திரி விழாவிற்கு, 3 இன்ச் முதல் 4 ½ அடி உயரம் வரையும் சிலைகள் உள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் சிலைகளை செய்து தருகிறோம். இந்த சிலைகளை, தமிழகம் முழுவதும் உள்ள பூம்புகார் விற்பனை நிலையங்களுக்கும் விற்பனை செய்து வருகிறோம்,"என்றார்.