பதிவு செய்த நாள்
11
ஆக
2022
12:08
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் திருக்குகை ஈஸ்வரன் கோவில், வகையாறா அரசாலையம்மன் என்ற வராஹி கோவில் உள்ளது.
கடந்த, 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் பகல் உற்சவம் மற்றும் இரவில் பல வாகனங்களில் அம்மன் எழுந்தருளி புறப்பாடு நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பள்ளூர் ஆதிதிராவிட மக்கள் குடியிருப்புகளில் இருந்து, அம்மனுக்கு தாய் வீட்டு சீதனமாக, பட்டுப்புடவை, தாலி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை எடுத்து வரும் நிகழ்ச்சி, காலை 10:00 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, தேரில் எழுந்தருளிய வராஹியம்மனுக்கு, தாய் வீட்டு சீதனத்தை சாமர்ப்பித்தனர். இளஞ்சிவப்பு நிற பட்டுப்புடவை மற்றும் மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். பின், அம்மனுக்கு தாலி சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியை, சிவாச்சாரியார்கள் செய்து முடித்தனர்.காலை 10:45 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக, தேர் வலம் வந்து, மீண்டும் தேரடியில் நின்றது.