அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2022 11:08
மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் ஆடி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆக., 3ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாளான இன்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பெருமாள் அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். நாளை 13ம்தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.